செல்லாண்டியம்மன் திருக்கோயில்

மூவேந்தர்களுக்காக மூன்று பாகங்களாக பிரிந்ததிருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலமான உறையூர் செல்லாண்டியம்மன் திருக்கோயில் வரலாறு:

திருச்சி, உறையூர், பாண்டமங்கலம் செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் காவிரி நதியுடன், குடமுருட்டி நதி சங்கமிக்கும் இடத்தின் தென்கரையில் கோவில் அமைந்துள்ளபடியால் காவிரியே இத்தலத்தின் தீர்த்தமாகும். செல்லாண்டியம்மனுக்கு மற்ற தெய்வங்களைப் போல தலை, கை மற்றும் உடல் இல்லை. கருவறையில் உள்ள மூலவர் சிலை இடுப்ப்புக்குக் கீழே உள்ள அங்கங்கள் மட்டும் உள்ளன. இது சற்று மாறுபட்ட சிலை அமைப்பாகும்.

மூலவர்: செல்லாண்டியம்மன் உற்சவர்: பனை ஓலை அம்மன் தல விருட்சம்: அரச மரம் மற்றும் வேம்பு தீர்த்தம்: காவிரி ஊர்: உறையூர்

கருவறை:

அம்மன் இத்தலத்தில் இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதியினை மட்டும் காட்டி தன சூலத்தால் அசுரனை வதம் செய்தபடி கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளாள். எனினும் அம்மனை முழு உருவம் உள்ள சிலை போல அலங்காரம் பண்ணியுள்ளார்கள். அபிஷேகததின் போது மட்டும் பாதம் பார்க்கலாம். இந்த சிலைக்குப் பின்னால் தற்காலத்தில் செய்த ஒரு முழு உருவச்சிலையும் கருவறையில் உள்ளது.

உற்சவர்:

ஒவ்வொரு வருடமும் திருவிழா நடக்கும்போது, பனை ஓலையில் அம்மனை எழுந்தருளச்செய்கிறார்கள். இந்த ஓலையில் அம்மன் அருள்பாலிப்பதாக நம்பிக்கை உள்ளது..

தல வரலாறு:

இத்தலத்தின் வரலாறு தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசர்களுக்குள் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. மூவேந்தர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்பதற்கு முன்பு தமிழ் நாட்டை எவ்வாறு பிரித்து பங்கிட்டுக் கொள்வது என்பது ஒரு பெரும் சிக்கலாக உருவானது. தங்களுக்குள் ஏற்பட்ட சிக்கலை மூன்று மன்னர்களுக்கும் பொதுவான ஒருவர் தான் தீர்த்து வைக்க முடியும் என்று நம்பினார்கள். தாங்கள் வணங்கும் அம்மனை நோக்கி வேண்டினார்கள். நல்ல தீர்ப்புக்காக அம்மனை நோக்கித் தவமியற்றினார்கள். அம்மனும் மனமிரங்கி அவர்களின் சிக்கலைத் தீர்க்க எண்ணி அவர்கள் முன் தோன்றினாள். மூவேந்தர்கள் தங்கள் பிரச்சனையை எடுத்துக் கூறி ஒவ்வொருவரும் ஆள வேண்டிய நாட்டின் பகுதிகளை சமமாகப் பங்கிட்டுத் தரும்படி அம்மனை வேண்டினர்.

அம்மனும் அவர்கள் விருப்பப்படி நாட்டை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி எல்லைகள் வகுத்துக் கொடுத்தாள். மன்னர்கள் மனமகிழ்ந்து அம்மனை தங்கள் நாட்டிலே எழுந்தருளுமாறு வேண்டினர். அவர்களுக்காக செல்லாண்டி அம்மன், தன்னைத்தானே மூவருக்கும் மூன்று பாகமாகப் பிரித்தளித்து, அவர்கள் நாட்டில் எழுந்தருளினாள் என்கின்றனர். அதன்படி, பாகம் ஒன்று மதுரையிலும், பாகம் இரண்டு கோவையிலும், மூன்றாவது பாகம் திருச்சியிலும் அமையப் பெற்றதாம். சோழ மன்னன் மட்டும் தன்னுடைய நாடு எப்போதும் செழிப்பாக இருக்கும்படி அருள வேண்டும் என வேண்டினான். அம்மனும் அவன் வேண்டுதலை ஏற்று காவிரி நதியால் சோழ நாடு எப்போதும் செழிப்புற்றிருக்கும்படி அருளினாள். சோழ மன்னனுக்கு அருள் செய்த அம்மன், இத்தலத்தில் செல்லாண்டியம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். 

தலைப்பாகம் சேர மன்னனுக்கு சொந்தமாக காங்கேயம் அருகில் கீரனூர் என்ற இடத்திலும், மார்பு பாகம் பாண்டிய மன்னனுக்கு சொந்தமாக மதுரை சிம்மக்கல்லிலும், இடுப்புக்கு கீழே பாதம் உள்ள பகுதி சோழ மன்னனுக்கு உரித்தானதாக திருச்சி உறையூரிலும் அமைந்துள்ளதாக தெரிவிக்கிறது அந்தக் கதை. கிழக்கு நோக்கிய இந்தக் கோவில் வளாகத்தில் தென்கிழக்கு மூலையில் அரசும், வேம்பும் இணைந்த பெரிய மரத்தடியில் வலம்புரி விநாயகர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவரை வணங்கி விட்டு கருவறையை நோக்கி சென்றால், வலது புறத்தில் மேலும் ஒரு வலம்புரி விநாயகரும், இடது புறத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் மட்டும் தனித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். செல்லாண்டி அம்மனின் பின்புறம் அம்மனின் முழு உருவச்சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பிற்காலத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தை ஒட்டி உள்ள மகா மண்டபம் 20 தூண்களை கொண்டு திகழ்கிறது. மற்ற கோவில்களில் அம்மனுக்கு எதிரில் சிம்மம் காட்சி அளிக்கும். இங்கு சிம்மம் இல்லை. அதற்கு பதில் பலி பீடத்திற்கு அருகே வேல் ஒன்று நடப்பட்டு உள்ளது. கோவில் சன்னிதியின் முன் மண்டபத்தில் அம்பிகையின் பாதம் பொறிக்கப்பட்ட பீடம் இருக்கிறது. இதனையும் அம்பாளாகவே பாவித்து பக்தர்கள் வணங்குகிறார்கள். அம்பாளுக்கு பூஜை செய்யப்படும்போது பாதத்திற்கும் பூஜை செய்யப்படுகிறது. 

பரிவார தேவதைகள்:

கோயில் முன்மண்டபத்தில் கருப்பண்ணசுவாமி, மதுரைவீரன் ஆகிய காவல் தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். வளாகத்தில் அரசமரத்தின் கீழ் வலம்புரி விநாயகர் காட்சி தருகிறார்.

படையல்:

பௌர்ணமி தினங்களில் மாலையில் அம்மனுக்கு உப்பில்லாத அன்னம் மற்றும் நவதானியம் படைக்கப்படுகின்றன. அம்மனின் பிரசாதமாக இவற்றையே விநியோகிக்கிறார்கள். தொடர்ந்து பிரசாதம் உண்டால் குழந்தைப்பேறு உண்டு என்ற நம்பிக்கை உள்ளது.

திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 7 ஆம் தேதி காளி ஓட்டத் திருவிழா நடைபெறுகிறது. தொடக்க காலத்தில் அம்மனைத் தூக்கிக்கொண்டு ஓடும் வழக்கம் இருந்தது. எனவே இவ்விழாவினை “காளி ஓட்டத் திருவிழா’ என்று அழைத்தனர். தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் இல்லை. புரட்டாசியில் லட்சார்ச்சனை, நவராத்திரி, ஆடி மற்றும் தை வெள்ளி விழாக்களும் உண்டு.

திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ள பெண்கள் பவுர்ணமியில் அம்மனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். அம்மனை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தாலி, எலுமிச்சை மாலை அணிவித்தும், விளக்கு ஏற்றியும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்கிறார்கள். திருச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல பஸ், ஆட்டோ வசதி உள்ளது.பனை ஓலையில் அம்மன் திருவுருவம் : வழக்கமாகவே அம்மன் கோவில்களில் ஆடி மாதம் பல்வேறு பூஜைகள் சிறப்பாக நடைபெறும். இங்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கின்றன. இந்த கோவில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் காளி ஓட்டத்திருவிழா 7 நாட்கள் நடக்கிறது. பொதுவாக கோவில்களில் திருவிழா காலங்களில் அம்பிகையின் பஞ்சலோக சிலையே உற்சவ அம்மனாக வீதியுலா எடுத்து செல்லப்படும். ஆனால் இங்கு பஞ்சலோக விக்கிரகம் இல்லை. அதற்கு பதிலாக பனை ஓலையில் செய்யப்பட்ட அம்மனை உற்சவ அம்மனாக கருதி வழிபடுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும்போது பனை ஓலையில் அம்மனின் உருவத்தை செய்கின்றனர். இந்த ஓலையில் அம்மன் அருளுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை இருக்கிறது. விழாவின்போது பனை ஓலை அம்மனை இந்த கோவிலில் இருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு திடலுக்கு கொண்டு செல்கின்றனர். தொடர்ந்து 6 நாட்களுக்கு அம்மனுக்கு பிரதான நெய்வேத்தியம் படைக்கப்பட்டு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. ஐந்தாம் நாள் விழாவின் முடிவில் அம்மனை மீண்டும் கோவிலுக்கு கொண்டு வருகின்றனர். ஆரம்ப காலத்தில் இந்த விழாவின்போது கோவிலில் இருந்து அம்மனை தூக்கிக்கொண்டு ஓடும் வழக்கம் இருந்தது. எனவே இந்த விழா காளி ஓட்டத்திருவிழா என்று அழைக்கப்பட்டது. இந்த வழக்கம் நாளடைவில் மறைந்து இப்போது நடைமுறையில் இல்லை.

ஓம் சக்தி 

*நன்றிகள் திரு தமிழ் பிரியன் ஐயா அவர்கள்*.

Leave a comment