சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சியைச் சார்ந்த முத்துசுவாமி என்ற மிராசுதாரர், முருகப்பெருமானின் திருவருளால் வடஇந்திய யாத்திரையை முடித்து, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெரும்பேர் கண்டிகை என்ற திருப்புகழ் தலத்திற்கு வந்தார். மலை மீது சுமார் நான்கு ஆண்டுகள் தவமிருந்தார்.

அங்கு தங்கியிருந்த காலத்தில் அவரது கனவில் குழந்தை வடிவத்தில் தோன்றிய முருகப்பெருமான், *பெருங்கரணையில் உள்ள மலையில்* எனக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.அதன்படி, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெருங் கரணை ஊரில் உள்ள மலையைக் கண்டறிந்தார். அதன் உச்சியில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். செடிகள், பாறைக் கற் களைச் சரிசெய்து, அதன்பிறகு அங்கேயே முருகன் சிலையை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபாடு தொடங்கினார். ஒருநாள் பெருத்த மழையால் கீற்றுக்கொட்டகை விழுந்துவிட, தனி ஆலயம் எழுப்ப தீர்மானித்து, சிறிய ஆலயம் எழுப்பினர். இந்த மலையைச் சீரமைக்க முத்துசுவாமி சித்தர் பெரும்பாடுபட்டுள்ளார். அருகில் உள்ள ஊர்களுக்கு காவடியெடுத்து ஆடி, அவர்கள் தரும் அரிசி உள்ளிட்ட காணிக்கைகளைப் பெற்றார். அதனைக் கொண்டு மலையைச் சீரமைக்கும் பணியாட்களுக்குச் சமைத்து தந்தார்.பக்தர்கள் தரும் காணிக்கைகளைத் திருப்பணிக்கு பயன்படுத்தினார். எவரிடமும் கையேந்தி நன்கொடை கேட்டதில்லை. குறையோடு வருபவர்களுக்கு திருநீறு தந்து குணமாக்கும் வல்லமையும், முத்துசுவாமி சித்தருக்கு முருகன் திருவருளால் கிடைத்துள்ளது.

இந்த சமயத்தில் காஞ்சிப் பெரியவர் ஒருமுறை இப்பகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான், பழனி பாலதண்டாயுத பாணியாகவே காட்சி தர, இந்தத் தலத்தை *நடு பழனி*’ என்று அழைத்திடுமாறு கூறினார். குருஸ்வாமி நாதரானமஹா பெரியவாளின்திருவாக்கால் *நடுபழனி* என்ற பெயர் சூட்டப்பட்டதும் இத்தலம் பிரபலம் ஆகாத தொடங்கியது.
மூலவர் சிலையை, மரகத சிலையாக வடித்து, புதிய தண்டாயுதபாணியாக பிரதிஷ்டை செய்து, 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.தமது பூவுலக நிறைவுக்காலம் வருவதை உணர்ந்த முத்துசுவாமிகளின் கனவில், மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் உருவம் வந்தது. அதே போல் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் கனவில், முத்துசுவாமி சித்தரின் உருவம் தோன்றியிருக்கிறது. அதன்பிறகு ஒரு முறை நடுபழனிக்கு, மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகள் வருகை தந்தார். அவரைக் கண்ட முத்துசுவாமி சித்தருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இருவரும் தங்களுக்கு தோன்றிய கனவைப் பற்றி பேசிக்கொண்டனர். அப்போதுதான் இருவருக்குமே ஒரே நேரத்தில் இதுபோன்ற கனவு வந்திருப்பது தெரியவந்தது.நடுபழனி மலை, பசுமையான பெருங்கரணை கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 300 அடி உயரமுள்ள கனக மலையான நடுபழனி, வடக்கில் 128 படிகள் கொண்டு மலையேற வசதியாக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
மேற்குப்புறம் வாகனங்கள் மலையேறும் சாலை வசதியும் இருக்கிறது. அங்கே மலேசியாவில் பத்துமலைப் பகுதியில் உள்ள முருகப்பெருமான் சிலையைப் போலவே, 45 அடி உயர முருகப்பெருமான் கம்பீரமாய் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். மலை உச்சியில் இந்த கோவில் உருவாக மூலக்காரணமான முத்துசுவாமி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதி முன்மண்டபத்தோடு எழிலாக ஆலய வடிவில் கட்டப்பட்டுள்ளது.சுவாமிகளின் நெருங்கிய நண்பராக விளங்கிய முறப்பாக்கம் சுவாமிகளின் சமாதி மலையடிவாரத்தில், நவக்கிரக சன்னிதி அருகே அமைந்துள்ளது.இதனை சுவாமிகளே செய்து முடித்தார். இத்தலம் திருமண வரம், குழந்தை வரம் அருளும் தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பவருக்கும் பக்தர்களுக்கு, கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.மஹா பெரியவாளின் அருள் ஆசியால் பழனிக்கும் , சென்னை வட பழனிக்கும் இடையில் நமக்கு ஒரு *நடுபழனி* கிட்டியது….இத்தலம் அச்சரபாக்கத்திற்கு ஒரு கி.மீ. தொலைவில் உள்ள ரயில்வே கேட்டிலிருந்து கிழக்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.