தோற்றமும் ஸ்ரீகிருஷ்ணனே* ! *முடிவும் ஸ்ரீகிருஷ்ணனே* !*
“ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே தங்களுடன் பிறந்து வளர்ந்து வாழ்வதால் யாதவர்களுக்கு தர்ப்பம் ஏற்பட்டது. தர்ப்பம் என்றால் ஆசைகள், கர்வம், மமதை என்று அர்த்தம். இவை அனைத்தையும் கொடுப்பவனும், அழிப்பவனும் இறைவனே!
யாதவர்களுக்கு அந்த ஆசையையும் எண்ணங்களையும் மமதையையும் கர்வத்தையும் தூண்டியவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அதனால்தான் யதுகுலமே உருவானது. அந்தக் குலத்திலேயே தானும் பிறப்பெடுத்து, அவர்களுடன் ஒன்றிக் கிடந்தான்.
இதனால் யதுகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அகம்பாவமும் தலைதூக்கியது. அந்தக் கிருஷ்ணனே நம்முடன் இருக்கிறான் என கர்வம் தலைக்கேறியது. மமதையுடன் திரிந்தனர்.இறுமார்புடன் வாழ்ந்தனர். இந்த கர்வமும் மமதையும் இறுமார்பும் மனித குலத்துக்குச் சத்ரு என்பதை உலகத்தாருக்குப் புரிய வைக்கவேண்டும் எனச் சித்தம் கொண்டான் கண்ணபிரான்.
விளைவு……. அந்த யதுகுலத்தையே அழிக்கவும் செய்தான். யதுகுலம் அழிந்தால், அந்தக் குலத்தைச் சேர்ந்த கண்ணனும் அல்லவா அழியவேண்டும்? அப்படியும் ஒரு நிகழ்வையும் நடத்திக்காட்டினான்.ஒரு காட்டில் கால் மேல் கால் போட்டப்படி ஸ்ரீகிருஷ்ணன் இருக்க……. அந்தக் கால்களின் வடிவைக் கண்டு, மான் என்று நினைத்து, ஒரு வேடன் அம்பெய்தினான். அந்த அம்பு, கிருஷ்ணனின் காலில் தைத்தது. இதையே காரணமாகக் கொண்டு, பழையபடி பரமபதத்துக்கு வந்தான்
ஆக……..ஆசை, கர்வம் ஆகியவற்றைக் கொடுப்பவனும் அவனே! அதனை அழித்தொழிப்பவனும் அவனே! இதனால் தான் அவனுக்கு *தர்ப்பஹா* எனும் திருநாமங்கள் அமைந்தது ! கூடவே, அத்ருப்ஹா எனும் திருநாமமும் கிருஷ்ணனுக்கு உண்டு. அதாவது, எந்த மமதையும் ஆசையும் இல்லாதவன் என்று அர்த்தம்!