சுதி, லயம் எல்லாம் சேர்ந்தாதான் , பாட்டு. அது மாதிரி,ஆண்டவனை , ஆள்பவனை , ஆளப் போகிறவனை சரியான விகிதத்தில் வைத்து இருக்கும் இடம் தான் ஆலயம். இப்படிப் பட்ட ஒரு ஆலயத்தில் நீங்கள் உள்ளே நுழையும்போதே , உங்கள் உடம்பில் சுணங்கிக் கொண்டு இருக்கும் சக்கரம் சீராக சுழல ஆரம்பிக்கும். உங்களுக்கும் தெளிவு கிடைக்கும் . நீங்களும் சுய, புத்தியுடன் செயல் பட ஆரம்பிப்பீர்கள்.
இப்படி , மிக சரியான விகிதத்தில் அமைந்து இருக்கும் ஆலயங்கள் இந்தியாவில் , ஏராளம். இந்த ஒரு விஷயத்தை நாம் புரிந்து இருப்பதைவிட, நம் எதிரி நாடுகள் தெளிவாகப் புரிந்து , பொறாமையில் புழுங்கிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக , நம் தென் இந்தியாவில் இப்படிப் பட்ட ஆலயங்கள் அதிகம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் , பாலை என ஐந்து இயற்கை நிலங்களும் இங்கு அதிகம். பாலை நிலமா ? கடற்கரை கூட பாலை தான்.
இப்படிப்பட்ட மகத்தான ஒரு பூமியில் தான் நாம் பிறந்து இருக்கிறோம். இல்லை , போன ஜென்மத்தில் பிறந்து இருப்போம்… இல்லைனா, நீங்கள் இப்போது எப்படி தமிழில் பேச, படிக்க முடியும்? அந்த பரம்பொருளின் மகத்தான ஆசி பெற, ஐதீக முறைப்படி அமைந்த ஆலயங்கள் இங்கு இருப்பதைப் போல , உலகில் வேறு எங்கும் கிடையாது. இன்றைக்கும், அயல் நாடுகளில் வசிக்கும் அன்பர்கள் நம் தமிழ் நாடு வந்தால், அது ஒரு கோவிலுக்குப் போக வேண்டும் என்கிற எண்ணத்தை உள்ளடக்கியே இருக்கும்.
நம் ஊரில் இருக்கும் நண்பர்களுக்குத்தான் இந்த ஆலயங்களின் மகிமை புரிவதே இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கும், பிற மதத்தவர்கள் வாரம் தவறாமல் , அவரவர் கடவுளை வணங்கினாலும் , நமக்கு பிரதோஷம், பௌர்ணமி கூட ஒரு பெரிய விஷயம் இல்லை. இந்த மாதிரி விசேஷமான நேரங்களில், விசேஷமான ஆலயங்களில் நாம் இருந்தாலே போதும், நமக்கு நம் கர்ம வினைகளின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று