லட்டு    பிரசாதம்

“சரித்திரக் காலம் முதல் பெருமாளுக்கு பல வகையான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டுவருகின்றன. இரண்டாம் தேவராயர் காலத்தில் நைவேத்தியங்கள் எண்ணிக்கை பலவாகப் பெருகியது. அந்தக் காலகட்டத்தில் அரசவையில் பணிபுரிந்த சேகர மல்லாண்ணன் எனும் அமைச்சர், பெருமாளின் நைவேத்தியத்துக்காகப் பல தானங்களை வழங்கினாராம். அப்போதுதான் `ஸ்ரீவாரி நைவேத்திய சமயம்’ எனும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் திருமலையில் உணவகங்கள் அவ்வளவாக இல்லை. பிரசாதங்கள்தான் பக்தர்களின் பசியைப் போக்கும் அருமருந்தாக இருந்தன.மேலும், பக்தர்களுக்கு அளிக்கப்படும் பிரசாதம் ‘திருப்பொங்கல்’ என்று அழைக்கப்பட்டது. பின்னரே அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டன.

இவற்றில் வடை தவிர வேறு எதுவும் வெகு நாள்கள் தாங்காது. மற்ற பிரசாதங்கள் கெட்டுப் போய்விடும் நிலையில் அவற்றை பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல இயலாமல் போனது. இதனால் அதிக  நாள்கள் கெடாமலிருக்கும் வடைக்குத்தான்  அப்போது மவுசு இருந்தது. இதைக் கவனத்தில் கொண்ட மதராச அரசாங்கம் 1803-ம் ஆண்டிலிருந்து பிரசாதங்களை விற்பனை செய்யத் தொடங்கியது. அன்றிலிருந்து ஸ்ரீவாரி ஆலயத்தில் பிரசாத விற்பனைக் கூடம் ஏற்படுத்தப்பட்டது.  அப்போது லட்டு பிடிப்பதற்கு முன்னர் உதிரியாக இருக்கும் பூந்தி, இனிப்புப் பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த பூந்திதான் லட்டாக  உருப்பெற்றது.ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்படும் பிரசாதங்கள் வடை, பொங்கல், சர்க்கரைப்பொங்கல்… இப்படி எத்தனையோ உண்டு. அவை அனைத்தையும் தாண்டி அன்றும், இன்றும், என்றும் முதல் இடத்தில் நிற்பதென்னவோ லட்டு மட்டும்தான். ஏழுமலையானுக்கு பிரசாதங்களைத் தயாரித்து பூஜைக்கு வழங்கியவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் , திருமலையில் லட்டு பிரசாதம் உருவான வரலாற்றை பார்ப்போம்

“லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களை `திட்டம்’ என்று அழைப்பார்கள். லட்டை அன்றாடப் பிரசாதமாக்கிய பெருமை அப்போது ஆலயப் பிரசாதங்களைத் தயாரித்து அளித்த கல்யாணம் ஐயங்கார் என்பவரையே சாரும். `கல்யாணம் ஐயங்கார்’ என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன். இவர், திருமணம் என்று யார் பத்திரிகை கொடுத்தாலும் சரி, அவர்களுக்கு பட்டுப்புடவை, மாங்கல்யம் போன்ற சீர்வரிசை அளித்து ஆசீர்வாதம் செய்துவிட்டு வருவார். இவர் காஞ்சிபுரம் அருகேயுள்ள பூதேரி என்ற கிராமத்திலிருந்து தமது உறவினர்களுடன் திருப்பதியில் தங்கி திருமலை ஏழுமலையானுக்கு கைங்கர்யம் செய்ய தம்மையும் தம் குடும்பத்தையும்  ஈடுபடுத்திக்கொண்டவர்.நாள்தோறும் திருமலைக்கு நடந்து படியேறிச் சென்று பெருமாளுக்கு அன்றாடப் பிரசாதங்களைத் தயாரித்து அளிக்கும் திருப்பணியை செய்துவந்தார்.

ஒருநாள் பெரும் செல்வம் படைத்த வியாபாரி ஒருவர், கோவிந்தன் தனது கோரிக்கையை நிறைவேற்றினால், மலை போன்ற பிரமாண்டமான லட்டைத் தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக்கொண்டாராம்.பெருமாளும் அவருடைய வேண்டுதலை நிறைவேற்றினார். அப்போது உருவானதுதான் லட்டுப் பிரசாதம். பக்தரின் லட்டு வேண்டுகோளைக் கேட்ட கல்யாண ஐயங்கார், அப்போது இருந்த திருமலை தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, மிகப் பிரமாண்ட லட்டைத் தயாரித்து, அதை உடைத்து வழங்குவதைவிட சிறிய லட்டாக அன்றைய தினம் கல்யாண உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அளிக்கலாமே என்று யோசனை தெரிவித்தார். இதை ஒப்புக்கொண்ட தேவஸ்தானம், அதன்படியே அன்றைய தினம்  கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதத்தை அளித்தது.

அன்றிலிருந்து சில காலம் கல்யாண உற்சவத்தில் மட்டும் லட்டு அளிக்கும் முறை உருவானது. பின்னர் அதுவே இன்றளவில் அனைத்து சேவைகளுடன்  லட்டு அளிக்கும் முறையாக மாறியது.இந்தப் பிரசாதங்கள் ஆலயத்தின் உள்புறத்தில் கொலுவிருக்கும் பெருமாளின் அன்னையான வகுளாதேவியின் நேரடிப் பார்வையில் மடப்பள்ளி அறையில் தயாரிக்கப்பட்டது.அங்கு தன் மகனுக்கு (பெருமாளுக்கு) தயாரிக்கப்படும் பிரசாதங்களை தாய் வகுளாதேவி மேற்பார்வையிட்டு அனுப்புவதாக ஐதீகம். உண்மைதான்! மகனின் பசி அன்னைக்குத்தானே தெரியும்?

Leave a comment