யோக நரசிம்மர் தரிசனம் – வேதாத்ரி

கடந்த ஒன்றரை வருடங்களாக பலவித காரணங்களால் தடைபட்ட எங்களின் தெய்வ தரிசனம் நேற்று ஒரு முடிவுக்கு வந்தது.  சுட்டெரித்து மக்களை பாடாய் படுத்திய வெய்யில் ஒரு வழியாக குறைந்து தெலுங்கானா மானிலத்தில் ஓரிரு மழை பொழிய பருவக்காலம் மாறியது. 

மேகங்கள் சூழ்ந்து நின்ற ஒரு விடிகாலைப் பொழுதில் நாங்கள் நால்வர் எங்களின் பயணத்தைத் தொடங்கினோம்.  ஹைதிராபாத்திலிருந்து விஜயவாடா செல்லும் வழியில் ஜெக்கய்யபேட்டா என்ற இடத்தில்  இருக்கும் நரசிம்ம க்ஷேத்திரமான வேதாத்திரியை நோக்கி சென்றோம்.

வழியில் சுமார் 7.30 மணிக்கு நக்கேரக்கல் என்ற இடத்தில் இருந்த சிரிடி சாயிபாபா மந்திரில் சாய்பாபா தரிசனம் செய்து கொண்டோம்.  பெரிய கோவில்  சனிக்கிழமையானதால் அதிகம் கூட்டம் இல்லை  நல்ல திவ்ய தரிசனம். அதனை முடித்துக்கொண்டு  அங்கிருந்து ஜெக்கய்யபேட்டா வந்து காலை உணவை முடித்துக்கொண்டு சில்லுகல்லு என்ற இடத்திலிருந்து பிரியும் ரோட்டில் 15 கி மீ பயணித்து  வேதாத்ரியை அடைந்தோம் .

தல வரலாறு

சோமாக்சுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் வேதங்களைத் திருடிக்கொண்டு கடலுக்குள் மறைந்தான். பிரம்மா நாராயணரிடம் முறையிட அவர் மச்சாவதாரம் எடுத்து வேதங்களை மீட்டார்.  அந்த வேதங்கள் நாராயணருக்கு நன்றி சொல்லி  தங்களுடன் பெருமாளும் தங்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்க இரண்யனை வதம் செய்தபின் அங்கு வருவதாக பெருமாள் உறுதியளித்தார். எனவே அவரின் வரவை எதிர்பார்த்து கிருஷ்ணவேணி நதிக்கரையில் சாளக்கிராம மலையில் வேதங்கள் தங்கின.  இரண்யவதம் முடிந்தபின் பெருமாள் ஜ்வாலா நரசிம்மராக வேதங்களுக்கு காட்சியளித்தார்.

ஐந்து நரசிம்மர்

வேதங்களை அழைத்துச் செல்ல வந்த பிரம்மா கிருஷ்ணவேனி நதிக்கரையில் கிடைத்த நரசிம்மரின் சாளக்கிராம கல்லுடன் புறப்பட்டார்.  ஆனால் அந்த கல்லின் உக்கிரத்தை பிரம்மாவால் தாங்கமுடியாமல் அதை நதிக்கரையிலேயே விட்டு சென்றார்.  பிற்காலத்தில் ராமரின் சகோதரி சாந்தாவின் கணவரான ரிஷ்யசிங்கர் வேதாத்ரி மலைக்கு வந்தபோது அவரது உக்கிரத்தை தணிக்க லட்சுமி தாயாரை பிரதிஷ்டை செய்தார் பிறகு இவர் லட்சுமி நரசிம்மரானார்.  இவரை தரிசிக்க வைகுண்டத்திலிருந்து கருடாழ்வார் வந்தார்  அவர் தன் பங்கிற்கு ஒரு வீர நரசிம்மரை இங்கு  பிரதிஷ்டை செய்தார்.  ஜ்வாலா நரசிம்மர் என்பது பெயர்  சாளக்கிராம நரசிம்மர்  லட்சுமி நரசிம்மர் வீர நரசிம்மர் ஆகியோருடன் மூலவராக வீற்றிருக்கும் யோகானந்த நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர்கள் இங்கு வீற்றிருக்கின்றனர். அடிவாரத்தில் இருந்து 285 படிகள் ஏறினால் சுயம்பு நரசிம்மர் புற்று வடிவில் இருப்பதைக் காணலாம். இங்கு ஆஞ்சனேயருக்கு சுதை சிற்பம் உள்ளது.

உய்யால வழிபாடு

குழந்தை இல்லாதவர்கள் யோகானந்த நரசிம்மருக்கு உய்யால வழிபாடு  [ உய்யால என்றால் தொட்டில் ] குழந்தை பிறந்ததும்  நரசிம்மரையும் செஞ்சு லட்சுமியையும் தொட்டிலில் இட்டு ஆட்டும் நிகழ்ச்சியை மேற்கொள்ளுகின்றனர்.

மிக அருமையான தரிசனம்  சுமார் 40 படிகள் இறங்கி கிருஷ்ணவேணியை தரிசித்து பிரோக்ஷணம் மட்டும் செய்துகொண்டு மீண்டும் ஹைதிராபத்தை நோக்கி பயணமானோம்.  சூரியாபேட் வந்து எங்களின் மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது இளைப்பாறி பயணத்தை தொடர்ந்தோம்.  வழியில் கோபாலபள்ளி என்ற இடத்தில் இருந்த வேணுகோபால ஸ்வாமியையும் தரிசித்துக்கொண்டு சுமார் மாலை 5.30 அளவில் ஹைதிராபாத்தை அடைந்தோம்.

 

Leave a comment