ட்ரெண்டி மருமகளும்..அப்ரசெண்டி மகனும்…

ஒரு வீட்டில் :ட்ரெண்டி மருமகளும்..அப்ரசெண்டி மகனும்…ஏண்டா பாலாஜி! டேபிள் மேல போளி வச்சிருந்தேனே.. நன்னாருந்துதோ….சூப்பராருந்தது… ஆமா நீ பண்ணினியா?இல்லடா! என் ப்ரெண்ட் ஜானுவாத்தில கொடுத்தா.. உனக்குப் பிடிக்குமேன்னு எடுத்துண்டு வந்தேன்…. வந்ததும் சூடு பண்ணி நெய் தடவிக் கொடுக்கலாம்னு நினைச்சுண்டிருந்தேன்…நீ வெறுமயே சாப்பிட்டுட்ட  போல.அதெல்லாம் காயத்ரி சூடு பண்ணிக் கொடுத்துட்டா…. நான் பாதி , அவ பாதி எடுத்துண்டோம்…ம்… அதானே பாத்தேன்… அம்மாக்கு துளி வைக்கணும்னு தோணித்தா.. வண்ணாத்திக்கு வண்ணான் மேல ஆசை . வண்ணானுக்கு கழுதை மேல ஆசை….

இப்ப யாரை கழுதைன்றேள்?…வந்துட்டா கழுகுக்கு மூக்குல வேர்த்தா மாதிரி….ஆமா… மொதல்ல கழுதைன்னேள், இப்ப கழுகுன்றேள், ஆக மொத்தம் என்னை மனுஷியாவே மதிக்கல….அம்மா தாயே! ஆரம்பிச்சுடாதே… நா யதார்த்தமாத்தான் சொன்னேன்…என்ன யதார்த்தம்? ஒரு பதார்த்தம் சாப்பிட்டதுக்கு என்னைக் கழுதையாக்கியாச்சே…!காயு! என்னதிது… ! ஏதோ அம்மா வாய் தவறிச் சொல்லிட்டா… அதுக்குப் போய் எதுக்கு இப்படி வால் வால்னு கத்தற?பாத்தேளா பாத்தேளா… வால் வால்னு கத்தறேனாம்.. அப்ப நானென்ன நாயா? மாடாட்டம் உழைச்சுக் கொட்டறேன்… ஆனா என்னை நாயாட்டமாத்தானே நடத்தறேள். சதா உங்க காலை சுத்திண்டு இந்த வீட்டையே சுத்திண்டு…..சரி சரி விடு….. வந்ததும் வராததுமா மல்லுக்கு நிக்காதே…. ஏதோ காக்காக்கு போடற மாதிரி எனக்கு ஒரு விள்ளல் வைக்கப்படாதான்னு கேட்டுட்டேன்.. அதுக்குக் கூட ஒரு கொடுப்பினை வேணும்… எறும்பாட்டமா சிந்தினது சிதறினதை சாப்டு வாழ வேண்டியிருக்கு….

அடடா! ஆரம்பிச்சுட்டேளா உங்க ட்ராமாவை… கார்த்தால ஆறு இட்டிலி தேங்காய் சட்னியோட, நாலு இட்லி நல்லெண்ணெயை குழைச்சு மிளகாய் பொடியோடன்னு… எந்த ஊர்ல எறும்பு இப்படி சாப்பிடறது? அத்தோட விட்டுதா,, கெட்டித்தயிர்ல ஒண்ணு, அதுக்கப்புறம் ஒரு ஸ்ட்ராங் காப்பி வேற…பாத்தியாடா.. நான் சாப்பிட்டதுக்கெல்லாம் கணக்கு வச்சுண்டிருக்கா, உன் பொண்டாட்டி… எனக்கும் உனக்கும் இட்டிலியை போட்டு அனுப்பிட்டு, சமையலறைக் கதவைச் சாத்திண்டு பூனையாட்டமா சத்தமே போடாம நன்னா நாலு நெய் ரோஸ்ட் சாப்பிடறாளே.. இன்னிக்கு வரைக்கும் ஏன்னு கேட்டிருக்கேனா சொல்லு….ஓஹோ… என்னை வேவு பார்த்தாறதோ…. …இந்த முதலைக்கண்ணீர் வடிக்கறதை நிறுத்துங்கோ…  எங்க பாட்டி அப்பவே சொன்னா, உன் மாமியாருக்கு பாம்புக்காதுடி…ஆந்தைக்கண்ணுடி எல்லாப் பக்கமும் பாக்கறா..  எல்லாத்தையும் ஒட்டுக்கேக்கறான்னு… நான் நம்பல… இப்பன்னா தெரியறது…

ஏது… அந்த மூஞ்சுறாட்டம் முழிச்சிண்டு நின்னாளே அந்த பாட்டிதானே.. அப்பமே எனக்கு டவுட்டுதான்… அரபி ஒட்டகமாட்டம் எல்லாத்துலயும் வந்து தலைய விட்டாளேன்னு…..ஆமாமா… எங்க பாட்டி அரபி ஒட்டகம்னா… உங்கக்காவை என்ன சொல்றது? குள்ளநரியாட்டமா என்னென்ன வேலை செஞ்சான்னு சொல்லணுமான்ன?ஆமா… அப்பத்தானே நீங்கள்ளாம் என்னென்ன ஏமாத்து வேலை செஞ்சேன்னு தெரிஞ்சது… பொண்ணு கிளி கொஞ்சறதுன்னு சொன்னா, அப்புறம் தான் தெரிஞ்சது பொண்ணுக்கு மூக்கும் நீளம், நாக்கும் நீளம்னு…ஆமாமா… நீங்க பெரிய பஞ்சவர்ணக்கிளி பாருங்கோ…. குயில் குரல்னா.. ஆனா வாயத் தொறந்தா யானை பிளிறல் தான்…..அடியே.. யானைக்கு மதம் பிடிச்சா என்னாகும் தெரியும்ல….ஏறி மிதிச்சா,,,,,இந்த சிங்கம் டயலாக்கெல்லாம் என்கிட்ட வேணாம்…. அப்புறம் எனக்குள்ள தூங்கிட்டிருக்கற மிருகத்தையெல்லாம் உசுப்பி விட்ராதீங்கோ…. வீடு தாங்காது….

பாத்தியாடா… என்ன பேச்சு பேசறான்னு…நீயானா அவ போட்றா ராமான்னா, இந்தா எண்ணிக்கோன்னு… குரங்காட்டமா தோப்புக்கரணம் போட்டுண்டிருக்க….அய்யோ அய்யோ…. ஒரே ஒரு போளி… அதுக்கு போய் கொஞ்ச நேரத்துல இங்க ஒரு போர்க்களமே வந்துருத்து…எனக்கே வீட்டுல இருக்கோமா இல்ல வண்டலூர் ஜூவுல இருக்கோமான்னு டவுட்டே வந்துருத்து…இரு இரு ஜூன்னு சொன்னவுடனே ஞாபகம் வருது… அச்சச்சோ மணி எட்டாச்சே… ஏண்டிம்மா காயு… எட்டரைக்கு நாம ஜூம்ல லாகின் பண்ண வேணாமோ…அது ஜூமில்ல… ஸ்ட்ரீம்யார்ட்…ஏதோ ஒண்ணு. ரெண்டு பேரும் மேட்சா ட்ரெண்டியா ட்ரெஸ் பண்ணிக்கணுமே… சீக்கிரமா வா… நீ போன வாரம் வாங்கினியே அந்த காஞ்சிபுரத்தைக் கட்டிக்கோ, என்னோட ரெட்டை வட அட்டிகை அதுக்கு மேட்சா இருக்கும்… எனக்கு உன்னோட முத்து செட்டைக் கொடு…ஆமா… நாம என்னென்ன பாட்டெல்லாம் பாடப்போறோம்?…..

மொதல்ல… அம்மா என்றழைக்காத உயிரில்லையேன்னு நான் ஆரம்பிக்கறேன்… நீங்க மருமகளே மணமகளே வா வான்னு பாடணும். உடனே நான் அம்மாவை வாங்க முடியுமான்னு பாடுவேன்.. நீங்க கண்ணான கண்ணே பாடணும்… அப்புறம் நான் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்னு பாடணும்.  கடைசில ரெண்டு பேருமா சேர்ந்து நல்லதொரு குடும்பம்னு பாடி முடிக்கணும்… புரிஞ்சதா…ஏண்டா இப்படி பேந்த பேந்த கோட்டானாட்டம் முழிச்சிண்டிருக்க. .சட்டுபுட்டுனு அந்த கம்ப்யூட்டரை ஆன் பண்ணி மெசஞ்சர்ல ஸ்ட்ரீம்யார்ட் லிங்க் கொடுத்திருப்பா. அதை க்ளிக் பண்ணி வை… அவா அவா வெட்டிண்டு வான்னா கட்டிண்டு வர்றா… நமக்குத்தான் எருமை மாடாட்டம் அசமஞ்சமா வந்து நிக்கறது.விடுங்கோம்மா… அதெல்லாம் நாம வாங்கிண்டு வந்த வரம். தெருவெல்லாம் தேனாறா ஓடினாலும், கேன்ல  புடிச்சு வைக்க கரடிக்குத் தெரியுமோ… பல்லி மாதிரி எப்பப்பாரு மோட்டுவளைய பாத்துண்டு உக்காந்திருக்கத்தான் தெரியறது… இருங்கோ பல்லின்ன  ஒடனே ஞாபகம் வருது… அங்க சபா மெம்பர்ஸை பாத்தவுடனே ஈன்னு கொரில்லா மாதிரி பல்லிளிக்காம, பதவிசா நடந்துக்கோங்க… கெக்கேபிக்கேன்னு ஏதாச்சும் ஜோக் அடிக்கறேன்னு ஒளறினேள்….

Contributed by Kannan Venkatakrishnan.

படித்துச் சுவைத்தது 

ஸ்ரீவைஷ்ணவரே!இன்று உமக்கான தளிகை எங்கள் திருமாளிகையில்தான்!மறுக்காமல், மறக்காமல் ஆத்துக்காரியும் அழைச்சுண்டு இன்று மதியம் எங்கள்அகத்திற்கு வாரும்!!பாகவத பிரசாதம்! மறுக்கத்தான் முடியுமா?தன்னவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டுஅழைத்தவர் வீட்டிற்குவிருந்துண்ணச் சென்றார் அந்த ஸ்ரீவைஷ்ணவர்!!நல்ல மரியாதை செய்து இருவரையும் அமர வைத்து விருந்துண்ணச் செய்தார் அழைத்த வைஷ்ணவர்!!வயிறு நிரம்பியதா? ஸ்ரீவைஷ்ணவரே!மனதும் நிரம்பியது! வைஷ்ணவரே!விழுந்து விழுந்து கவனித்த உம் பேரன்பிலே நாங்கள் விழுந்தே போனோம்!!

எங்காத்து தளிகை எப்படி?பகவானின் பிரசாதம் அது! வார்த்தைகளுக்குள் அடங்காதது! அருமை என்றஒற்றைச் சொல்லில் அதன் சுவையை நான் உணர்த்திவிட முடியாது! கவியாகப் பாடட்டுமா?அத்தனைச் சிறப்பாய் இருந்ததா தளிகை? ஓய்! பொய்யொன்றும் இல்லையே? கவிதைக்கு பொய் அழகு! அதனை நானும் அறிந்துள்ளேன்! உம் கவியும் பொய்தானோ?அதில் பொய்யே இருக்காது! கேட்டுத்தான் பாருமே!

கண்ணமுது கோவில்! கறியமுது விண்ணகர்! அன்னமுது வில்லிப்புத்தூர் ஆனதே!எண்ணும் சாற்றமுது மல்லை!குழம்புமது குருகூர்!பருப்பதனில் திருமலையே பார்!!அவரது திருவடிகளில் விழுந்து சேவித்தார் விருந்து  கொடுத்தவர்!

எங்காத்து தளிகையில் இத்தனைத் திவ்யதேசமா?கண்களில் நீர் பனிக்க வந்தவர்களை வழியனுப்பி வைத்தார்!ஏன்னா! கோபிச்சுக்காதீங்கோ! கவி பாடும் அளவிற்கா அவாத்து தளிகை இருந்தது? நானும்தான் தினமும் எத்தனையோ செய்கிறேன்! ஒரு திவ்யதேசமும் காணோமே?அடியே மண்டு! நமக்கு நாமே பாராட்டிக் கொள்வதற்கு பெயரா தாம்பத்யம்? என் சுவை நீயறிவாய்! உன் குறை நானறியேன்! அந்தப் பாட்டுக்கு உனக்கு அர்த்தம் புரியலையா?அந்த அளவுக்கு ஞானம் இருந்தால் உங்காத்துக்கு நான் ஏன் வாக்கப்படப் போகிறேன்? நான் மண்டுதான்! நீங்களே சொல்லுங்கோ!!

கண்ணமுது கோவில்! கண்ணமுது என்றால் பாயசம்! கோவில் என்றால் ஸ்ரீரங்கம்! அரங்கன் கோயிலில் பாயசம் மண் சட்டியில்தான் வைப்பார்கள்! அதனால் பாயசம் சற்று  அடிபிடிப்பது என்பது அங்கே தவிர்க்க முடியாத ஒன்று! இங்கேயும் பாயசம் அடிப்பிடித்து இருந்ததால் கண்ணமுது கோவில்!!அப்படியான்னா! அடுத்தது! அடுத்தது!கறியமுது விண்ணகர்! கறியமுது என்றால் காய்கறி வகைகள்! விண்ணகர் இருக்கும்ஒப்பில்லாத பெருமானுக்கு நைவேத்தியம் எதுவிலும் உப்பே சேர்க்க மாட்டார்கள்! இவாத்து கறியமுதிலும் இன்று உப்பில்லை! அதனால் கறியமுது விண்ணகர்!!

அருமைன்னா! அப்புறம்… அப்புறம்…அன்னமது வில்லிபுத்தூர் ஆனதே! ரங்கமன்னாரின் கோயிலிலே அன்னம் குழைந்தே இருக்குமாம்! இங்கேயும் சாதம் குழைந்தே இருந்ததனால் அன்னமது வில்லிபுத்தூர்!!இப்படியும் உண்டா? அடுத்தது… அடுத்தது…..சாற்றமுது மல்லை! சாற்றமுது என்றால் இரசம்! மல்லை என்றாலோ கடல்! கடல் நீரைப் போல அவாத்து சாற்றமுதிலும் உப்பே அதிகம்!!ஏன்னா! கொஞ்சம் அதிகமாத்தான் போறீங்க! அடுத்தது என்ன?

குழம்பது குருகூர்! குருகூரிலே எது பிரசித்தம்? நம் ஆழ்வான் இருந்த புளியமரம்தானே!குருகூர் என்றாலே புளிதான்! அவாத்து குழம்பிலும் வெறும் புளிதான்!!கடைசியையும் சொல்லிவிடுங்கள்!பருப்பதில் திருமலை! திருமலை முழுவதும் கல்தான்! அவாத்து பருப்பு முழுதும் கல்லும் இருந்ததே?ஏன்னா நன்னாவா இருக்கு! இப்படியா பாடிவிட்டு வருவீர்? அர்த்தம் புரிந்தால்அவர்கள் தவறாக உம்மை எண்ண மாட்டாரோ? 

அடியே! கட்டாயம் எண்ண மாட்டார்! பாகவத சேஷம் என்று அந்த உணவினைஅவர்கள் குடும்பம் முழுதும் இந்நேரம் உண்டிருப்பர்! அந்த உணவினில் அவர்கள்சுவைகளைக் கட்டாயம் கண்டிருக்க மாட்டார்கள்! நான் சொல்லி வந்த திவ்ய தேசங்கள் மட்டுமே அவர்கள் எண்ணத்தில் இருக்கும்!வெறும் சாதமல்ல அது! இந்நேரம் அது பிரசாதமாய் மாறியிருக்கும்!! சரின்னா! என்னை மன்னித்து விடுங்கள்! ஒன்று கேட்கிறேன்! கட்டாயம் செய்வீர்களா?

கட்டாயம் செய்கிறேன்! என்ன வேண்டும் உனக்கு?நல்ல தமிழ்  சொல்லித் தருகின்ற ஒரு ஆசான் வேண்டும்! நான் தமிழ் கற்க வேண்டும்! நாளை என் சமையலில் எந்தத் திவ்யதேசம் மறைந்து வருகிறது என நானும் அறிய வேணடும்!

ரசம் , பரவசம்

ரசம் சாதம் சாப்பிடப் பிடிக்காதவர்கள் மேற்கொண்டு இதைப் படிக்க வேண்டாம்.. படித்தால் அது பிடித்துப் போகும் அபாயம் இருக்கிறது…..எனவே , யாரும் படிக்காதீர்கள்.அட சொல்லச் சொல்ல என்ன பண்றிங்க….சரி , இனி நான் ஒண்ணும் பண்ணமுடியாதுங்க…! வாங்க என் கூட…

ரசம் சாதம் என்பது எனக்கு 2 வயதில் அறிமுகமானது. ரசஞ்சாதம் சாப்பிடுறியா? என்று கேட்டாலே என் முகத்தில் நவரசமும் மிளிருமாம்.!சூடான சாதம்.. கொஞ்சம் தக்காளிய தூக்கலா போட்டு புளிய லேசாக போட்டு  பண்ணிய ரசம் எனது ஃபேவரிட். அதிலும் சூடாக ரசஞ்சாதத்துடன்  மணல் போலிருக்கும் வீட்டில் செய்த நெய்யுடன் சாப்பிடுவதே…. ச்… ச்… ச்… திவ்யம்.

பருப்பு ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம், பூண்டு ரசம், எலுமிச்சை ரசம், கொத்தமல்லி ரசம், இப்படி பல ரசங்கள் என் வாழ்வின் சுவையான பரவசங்கள். பொதுவாக ரசம் சாதத்திற்கு உருளைக் கிழங்கு காரக்கறி/ பொரியல் இரண்டும் திகிரி தோஸ்த்து.! சுட்ட அப்பளம் ரசத்தின் தாய் என்றால் , பொரித்த வடாமும் அப்பளமும் காதலிகள்.! கூட்டுக்கு ரசத்தை பொறுத்து தொட்டுக் கொள்ள சில ஜோடிகள் உள்ளன .

 எலுமிச்சை ரசம் என்றால் முட்டைகோஸ் பருப்புக்கூட்டு, மிளகு ரசத்திற்கு தக்காளி கூட்டு, பூண்டு ரசத்திற்கு பூசணிக் கூட்டு எனச் சாப்பிட வேண்டும்.. எலுமிச்சை ஊறுகாயும் பிரமாதம் அது கார சாரர்களின் விருப்பம்.!எனக்கு மாவடு சாறுடன் எல்லா ரசஞ்சாதங்களும் சாப்பிட ரொம்பவே பிடிக்கும்….அடுத்த இடத்தில் மாங்காய் தொக்கு.!

 அப்பளம் வந்த பிறகு எனது மிக மிகப் பிடித்த உணவாகிப்போனது ரசம்.! பூண்டு மற்றும் மிளகு ரசங்களுக்கு அப்பளம் செம ஜோடி.! அரிசி வடாம், வெங்காய வடாம் எலுமிச்சை ரசத்திற்கு ஏற்ற பொருத்தமான ஜோடிகளாக்கும்!.பருப்பு, சாதம், ரசம் போன்ற மெனுக்கள் எங்கள் வீட்டில் வாரத்தில் ஒரு நாளாவது இருந்தே ஆகவேண்டும். பருப்பு போட்டு ரசம் என்றால் முதலிடம் மிளகு ரசத்திற்கு! அடுத்த இடம் பூண்டு ரசத்திற்கு.! 

சூடான சாதத்தில் சிறிது  நெய்விட்டு பருப்பு போட்டு பிசைந்து பிறகு ரசம் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்களேன்.. ஆஹா…!  ஆஹா…அதை அமுதமென்றே  அழைப்பீர்கள் அவ்வளவு ருசி.! ரசம் சாதத்துடன் சாப்பிடத்தான் அப்பளம் கண்டு பிடிக்கப்பட்டது என்று யாரேனும் சொன்னால் நான்…அதை மறுக்காமல் முதல் ஆளாக  ஒப்புக்கொள்வேன்.! ரசமும் அப்பளமும் அவ்வளவு இஷ்டம் எனக்கு.

 அதைவிட இன்னொரு செளகரியம் என்னவெனில் , சாதம் கொஞ்சம் குழைந்து விட்டால் *ரசம் அதகளம் தான்….* குழைந்த சாதத்தில் ரசம் என்றால் அது விஷம் என்றாலும் தயங்காது சாப்பிடுவேன்.!ஆயுள் முழுவதும் அது போதும் எனக்கு .

2 கரண்டி ரசம் ஊற்றிக் கொள்கிற அதே அளவு சூடான குழைவான சாதத்திற்கு நான் 6 கரண்டி ஊற்றி தட்டெங்கும் அலையடிக்க… அலையடிக்க… பிசைந்து சாப்பிடுவேன்.! இன்றும் அது என் வழக்கம்.! கூடவே அப்பளம் மட்டும் இருந்தா போதும்.! இந்திர பதவி கிடைச்சா கூட இரண்டாம் பட்சம்தான்.அதிலும் கடைசியில் தட்டோடு எடுத்து வாய் வைத்து சுர்ர்ர்ன்னு உறிஞ்சிக் குடிக்கும் சுகம் இருக்கே.. ஸ்ஸ்ஸ்ஸ்….. அடடா காரமும் புளிப்பும் நாவில் பட்டு தொண்டையில் காரம் எரியிற அந்த சுகம் இருக்கே!  ம்……. ஹலோ சொல்லாம கொல்லாம எங்க ஓடுறிங்க? ரசம் சாதம் சாப்பிடத்தானே!இருங்க , இருங்க நானும் வர்றேன்.ரசத்தை மட்டும் தான் சூப் போல குடிக்கலாம். 

குளிர் காலத்தில இரவில் குடித்து பாருங்கள். கண் முன்னே சொர்க்கமே தெரியும்.எனக்கு மிகவும் பிடித்தது என்னோட பாட்டி செய்யிற ஈய சொம்பு ரசம் தான்……நாக்கு கொட்டுதோ…வாங்க சாப்டலாம் ரசம் சாதத்தை பரவசமாக…

படித்தேன்! ரசித்தேன்!!பகிர்ந்தேன்!!

தேவை ஓடிபி….

           

சிவராமன் அரசு அதிகாரியாக ஓய்வு பெற்றார். அவருக்கு சேர வேண்டிய  பி. ஃஎப், கிராச்சுவிடி, கம்முடேஷன், லீவ் என்காஷ்மென்ட், இத்யாதி நாளாவட்டத்தில்  வங்கி அக்கவுண்டுக்கு வந்து சேர்ந்தது. அரை கோடிக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். வானில் பறப்பது போல உணர்ந்தார்.

வசிப்பது 700 சதுர அடி ஃபிளாட்டில்தான் ஆனாலும் சொந்த வீடு எனபதால் வாடகை மிச்சம்..மாசா மாசம் பென்ஷன் 60 ஆயிரம் வரும் எனபதால் நோ டென்ஷன். மாதாந்திர செலவுக்கு ( காரை மெயின்டெயின் செய்யும் செலவையும் சேர்த்து ) தாராளமாக போதும். இந்த பணத்தை ரிஸ்க் இல்லாத வண்ணம் மியுசுவல் பண்டிலும் வங்கி டெபாசிட்டிலும் பிரித்து போடவேண்டும். கொஞ்ச நாளாகட்டும்…அதுவரை சேமிப்புக்கணக்கிலேயெ இருக்கட்டும்

இவர் ஓய்வு பெறுவதை மோப்பம் பிடித்த இஷ்ட மித்திர பந்துக்கள் உடனே  நிதி வேண்டி கருணை மனுக்களை ஈமெயில் வாட்ஸப், எஸ் எம் எஸ், நுணுக்கி எழுதிய போஸ்ட் கார்ட் , இனலன்ட் லெட்டர், ஏ4 சைஸ் மனு  இவற்றின் மூலம் அனுப்பலானார்கள். மகளின் திருமணம், மகனின் கல்வி,  எண்சாண் உடம்பில் இருக்கும் ஏராளமான  நோய்களுக்கான சிகிச்சை, இப்படி காரணங்களை சொல்லி.. சிவராமனா கொக்கா?இந்த பங்காளிகளூக்கு 

இப்படி பதில் அனுப்பினார்:” அன்புடையீர்,  ஒய்வு பெற்றதால்   எனக்குக்  கணிசமான தொகை கிடைக்கும் என்பது  என்னமோ  உண்மைதான், ஆனால் நான் ஏற்கெனவே ஆபீசில் வாங்கியிருந்த கார் லோன் ஹவுசிங்க் லோன்,பி  எஃப் லோன் இதெல்லாம் போக அற்ப சொற்ப தொகைதான் கையில் கிடைத்தது. அது எனக்கே போதுமா என்று தெரியவில்லை. இதனால் உதவ மனமிருந்தும் கைவசம் காசு இல்லை.  என்னை மன்னிக்கவும்” மேற்படி நபர்களை கையோடு  போனில் பிளாக் செய்தார். 

அடுத்து தன்  வங்கி அக்கவுண்டை மனைவியின் பெயரை சேர்த்து ஜாயின்ட் அக்கவுண்டாக மாற்றினார்.தனக்கு ஏதாவது ஆனாலும் ஃ பாமிலி பென்ஷன் அக்கவுண்டில் வந்துவிடும். அவளிடம் தமாஷாக சொன்னார் : இந்த ஜாயின்ட் அக்கவுண்டில் இருக்கும் பாதி பணம் என்னுது..பாதி உன்னுது. புரியுதா?”புரிந்தாற்போல அலமேலு தலையை ஆட்டினாள்.

அடுத்து மனைவிக்கு நெட் பாங்கிங்க் செய்வது குறித்து சொல்லிக் கொடுத்தார்.அக்கவுண்டில் லாக் இன் செய்து  நுழைந்து  பண பரிமாற்றத்துக்கான பின் நம்பரையும் அடுத்து  மொபைலில் வரும் ஓடிபியையும் போடுவது எப்படி என்றெல்லாம் சொல்லித் தந்தார்,  ஒரு அவசரத்துக்காக அவள் தெரிந்துகொள்வது நல்லதுதானே என்று நினைத்ததால்…!”அலமேலு..ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சிக்க. பாஸ்வர்டும்  ஓடிபி என்பதும்  ரொம்ப முக்கியம். ரகசியம்…..யாருக்கும் சொல்லவே கூடாது. புரியுதா …மறந்துடாதே. போன்ல யாராவது கேட்டா போனை கட் பண்ணிடு” என்றார். 

ஒரு நாள் கோவிலுக்கு போய் விட்டு வந்தார். வந்ததும் அலமு சொன்னாள் “ஏங்க, பேங்குலேருந்துபோன் வந்தது   ‘உங்க அக்கவுண்டில்  புது சாஃப்ட்வேர் போட்டிருக்கோம். அதுக்கான ஒரு ஓடிபி மொபைலில் வந்திருக்கும் ..அதை  ஷேர் பண்ணுங்க’ ன்னு கேட்டாங்க.”சிவராமன் வயிற்றில் அரை கிலோ  தும்கூர் புளி கரையலாயிற்று. ‘பேங்குலேருந்துதான் போன் வந்ததுன்னு எப்படி தெரியும்?” என்றார் கலவரத்துடன்“அவங்களே சொன்னாங்களே?”” உனக்கு அறிவு இருக்கா… யாராவது சொன்னா நம்பிடுவியா?  ”ஒரு முறை மூச்சை நன்றாக இழுத்துவிட்டு கேட்டார்”ஓடிபியை சொல்லிட்டியா?””ஆமாங்க…வெறும் சாஃப்ட்வேர் அப்டேஷந்தானே, மணி  டிரான்ஸ்பர் இல்லையே   அதனால ஓடிபியை ஷேர் பண்ணிட்டேன்.”

நெஞ்சைப் பிடித்தபடி சோபாவில் சாய்ந்தார்.’ அம்பது லட்சம்டி …..மினிமம்  பாலன்ஸ்  கூட வைக்காமல் வழித்து எடுத்திருப்பாங்களே” என்று முணுமுணுத்தபடி. அலமேலுவின் எட்டு பவுன் பிஸ்மார்க் தாலி செம ஸ்டிராங்க்  என்பதாலும்,  சிவராமன் பரம்பரையில் யாருக்கும் ஹார்ட் அட்டாக் ஹிஸ்டரி இல்லாததாலும் இந்த சூழ்நிலையிலும் யாருக்கும் வந்திருக்கூடிய  இன்ஸ்டன்ட்  ஹார்ட் அட்டாக், ஸ்டிரோக் இவற்றிலிருந்து தப்பினார். அவருடைய ஈஸிஜியை மட்டும்  அந்த க்ஷணத்தில் எடுத்திருந்தால் அது உக்ரைன் யுத்தத்துக்கு பிந்தைய ஷேர் மார்க்கெட் கிராப் போல இருந்திருக்கும் என்பது மட்டும்  திண்ணம்.ஒரு காபியை சூடாக பருகி ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு டெஸிபல்  சற்றே குறைந்த ஹார்ட் பீட்டுடன் மொபைலில் லாக் இன் செய்துகணக்கைப்   பார்த்தார்.

என்ன ஆச்சரியம்….50 லட்சம் ரூபாய் அக்கவுன்டில் சமர்த்தாக அமர்ந்திருந்தது….அவரைப் பார்த்து ஹாய் சொன்னது. அப்பாடா… பெருமூச்சை வெளியேற்றினார். ஆபத்து  நீங்கிவிட்டது.  ஓடிபி வந்து நெடுனேரம் ஆனதால் இனிமேல் அது காலாவதியாகியிருக்கும். அதை யாரும் உபயோகிக்க முடியாது என்பதால் நிம்மதி அடைந்தார்.மொபைலில் ஓடிபியைப் பார்த்தார்’அலமேலு … 2422 அப்படின்னு ஓடிபி வந்திருக்கு…அதை கரெக்டா ஷேர் பண்ணீயா? இல்லை ஏதாவது தப்பான பிகர் சொன்னியா?””நம்ம அக்கவுண்ட் ஜாயின்ட் அக்கவுன்ட் இல்லையா. பாதி பாதின்னு சொன்னீங்களே…அதனால்  போன்ல  வந்த ஓடிபி நம்பரை ரெண்டால வகுத்து  என் ஷேரான 1211 மட்டும் சொன்னேங்க.. அவங்ககூட  தப்பா இருக்கேன்னு  திருப்பி திருப்பி கேட்டாங்க. நான் அந்த நம்பரைதான் மறுபடி சொன்னேன். போனை வச்சுட்டாங்க… நான் செஞ்சது தப்பாங்க ?”

”லைஃபுல  முதல் தடவையா ஒரு தப்பை  கரெக்டா பண்ணியிருக்கே …அதனாலே  நம்ம பணம் தப்பிச்சது……..சரி கிளம்பு…””எங்கே..?””உனக்கு தனியா ஒரு புது மொபைலும் சிம் கார்டும் வாங்கித் தரேன்.. இன்னொரு தடவை இந்த ஓடிபி ரிஸ்க் எடுக்க முடியாதும்மா….” என்றார் புன்முறுவலுடன்…

நன்றி அரிமா முத்து ஆர் பழனிசாமி

அன்புக்குரியவரிடம் கேலி  செய்வது

ருக்மணி* …. *தமது  அன்புக்குரியவரிடம் கேலி  செய்வது, பேசுவது  தம்பதிகளுக்கிடையே மிக உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கும் என்ற ஸ்ரீகிருஷ்ணர்*  ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மணி தேவியின் படுக்கையறையில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அப்பொழுது ருக்மணியும் அவளது பணிப்பெண்களும் பகவானுக்கு பலவிதமான பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தனர் ..ஸ்ரீ கிருஷ்ணர்   ருக்மணியை பார்த்து பரிகசிக்க (கிண்டல்)  துவங்கினார்.

முன்பு தோற்றத்திலும் குணத்திலும் உனக்குத் தகுதி உள்ள சீரும் சிறப்புமிக்க பல அரசர்கள் உன்னை மணக்க விரும்பினர் ..உண்மையில் உன் தந்தையும் சகோதரனும் உன்னை சிசுபாலனுக்கு கொடுக்க எண்ணி இருந்தனர்..அப்படி இருக்க. ஒரு முறை ஜராசந்தனிடம் இருந்த பயத்தால் என் ராஜியத்தை துறந்து கடலுக்கு ஓடிய என்னைப்போன்ற தகுதியற்ற ..ஒரு கணவனை நீ ஏன் ஏற்றுக்கொண்டாய்?  மேலும் உலக நீதிகளையும் நான் மீறுகிறேன்.

எனக்குச் சொந்தமானது எதுவும் இல்லை. நான் பரம ஏழைகளுக்கு பிரியமானவனாகவும் செல்வ சிறப்புடன் உள்ளவர்கள். நிச்சயமாக என்னை போன்ற ஒருவனை பூஜிக்க மாட்டார்கள்…. என்று கேலி பேசிய கிருஷ்ணர்தன் கணவருக்கு மிகப் பிரியமானவள் என்ற ருக்மணியின் தேவியின் எண்ணத்தை சிதறடித்த  பின் ஸ்ரீகிருஷ்ணர் பேசுவதை நிறுத்திக் கொண்டார்..இதைக் கேட்ட அழத் தொடங்கிய ருக்மணி.. உடனே பெரும் பயம் வேதனை மற்றும் கவலை ஆகியவற்றால் பிடிக்கப்பட்டு உணர்விழந்து கீழே விழுந்து சரிந்தாள் .

தமது கேலிப்பேச்சு அவள் தவறாக புரிந்து கொண்டதைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.. அவளிடம் இரக்கம் கொண்டார் ..அவளை தரையில் இருந்து​தூக்கி எடுத்த பகவான் .அவரிடம் கொஞ்சிப் பேசி பின். பின்வருமாறு அவளைத் தேற்றினார்.நீ என்னிடம் முழுமையாக பற்றுக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன் .என் கேலி பேச்சினால் நீ முகத்தை சுளித்து அதனால் உன் தாமரை முகம் அலங்கரிக்கப்படுவதை நான் காண வேண்டும் என்ற ஆசையினால் தான் இப்படி பேசினேன் ..ருக்மணி….தமது  அன்புக்குரியவரிடம் கேலி  செய்வது, பேசுவது  தம்பதிகளுக்கிடையே மிக உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கும் என்று ஸ்ரீகிருஷ்ணர் ருக்மணியிடம்  சிரித்து சமாதானம் செய்தார்…

புராண காலங்களில் ATM???

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், சிவபெருமானிடம் அவசரத் தேவைக்கு பொன் கேட்டார். இறைவனும் மறுப்பின்றி 12,000 பொன்களை கொடுத்தாராம். சுந்தரர் உடனே ஈசனிடம் ஸ்வாமி இவ்வளவு பொன்களையும் என்னால் சுமந்து செல்ல முடியாது. இதனை எனக்கு திருவாரூரில் கிடைக்குமாறு அருள் புரியுங்கள் எனக் கூறினார். ஈசன் உடனே சுந்தரரிடம் நீ இந்த பொன் மூட்டையை இங்குள்ள மணிமுத்தாறில் போட்டு விட்டு ஆரூரில் கமலாலயத்தில் எடுத்துக் கொள் எனக் கூறினாராம். சுந்தரரும் அவ்வாறே செய்து விட்டு திருவாரூக்கு சென்று விட்டார்.

சில நாட்கள் கழித்து சுந்தரரின் மனைவி பரவை நாச்சியார் அவரிடம் அவசரமாக பொன் தேவைப்படுகிறது எனக் கூறியதும், மனைவியை அழைத்துக் கொண்டு கமலாலயத்திற்கு அழைத்துச் சென்று ஈசன் பொன் அளித்த கதையை கூறினார். அதைக் கேட்டதும் பரவைக்கு வியப்பு தாளவில்லை. ஆற்றில் போட்டு விட்டு குளத்தில் எடுப்பதா என வினவினார்.

சுந்தரர் உடனே குளத்தில் இறங்கி சிவபெருமான் மேல் பதிகம் பாடியதும், இறைவன் அருளால் மணிமுத்தாற்றில் போட்ட பொன் கமலாலயத்தில் கிடைத்தது. அந்த பொன் உண்மையான பொன்னா என சோதிக்க த்யாகராஜ ஸ்வாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானிடம் சுந்தரர் பொன்னை உரைத்து தரச் சொன்னார். அதனால் அன்றிலிருந்து அந்த விநாயகர் மாற்றுரைத்த பிள்ளையார் என்றே அழைக்கப்பட்டார். ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் ஸ்ரீமஹா கணபதி ரவதுமாம் என்ற கௌளை ராக கீர்த்தனையில், ஸுவர்ணாகர்ஷண விக்னராஜோ என்று ஈசனின் திருவிளையாடல் சம்பவத்தை விவரிக்கிறார்.

சுந்தரர் பக்தி என்னும் கணக்கை (Account) சிவபெருமானிடம் தொடங்கி, அவன் நாமத்தை PIN நம்பராக உபயோகித்து பொருள் செல்வத்தை பெற்றிருக்கிறார்.

ஒரு தளிகையில்          ஒரு திவ்ய தேசம்

 

ஸ்ரீவைஷ்ணவரே!இன்று உமக்கான தளிகைஎங்கள் திருமாளிகையில்தான்!மறுக்காமல், மறக்காமல்ஆத்துக்காரியும் அழைச்சுண்டுஇன்று மதியம் எங்கள்அகத்திற்கு வாரும்!!பாகவத பிரசாதம்!மறுக்கத்தான் முடியுமா?

தன்னவளையும்தன்னுடன் அழைத்துக் கொண்டுஅழைத்தவர் வீட்டிற்குவிருந்துண்ணச் சென்றார் அந்த ஸ்ரீவைஷ்ணவர்!!நல்ல மரியாதை செய்துஇருவரையும் அமர வைத்துவிருந்துண்ணச் செய்தார்அழைத்த வைஷ்ணவர்!!

வயிறு நிரம்பியதா?ஸ்ரீவைஷ்ணவரே!மனதும் நிரம்பியது!வைஷ்ணவரே!விழுந்து விழுந்து கவனித்தஉம் பேரன்பிலே நாங்கள் விழுந்தே போனோம்!!எங்காத்துதளிகை எப்படி?

பகவானின் பிரசாதம் அது!வார்த்தைகளுக்குள் அடங்காதது!அருமை என்றஒற்றைச் சொல்லில்அதன் சுவையை நான்உணர்த்திவிட முடியாது!

கவியாகப் பாடட்டுமா?அத்தனைச் சிறப்பாய்இருந்ததா தளிகை?ஓய்! பொய்யொன்றும் இல்லையே?கவிதைக்கு பொய் அழகு!அதனை நானும் அறிந்துள்ளேன்!உம் கவியும் பொய்தானோ?அதில் பொய்யே இருக்காது!கேட்டுத்தான் பாருமே!

கண்ணமுது கோவில்!கறியமுது விண்ணகர்!அன்னமுதுவில்லிப்புத்தூர் ஆனதே!எண்ணும் சாற்றமுது மல்லை!குழம்புமது குருகூர்!பருப்பதனில்திருமலையே பார்!! அவரது திருவடிகளில்விழுந்து சேவித்தார்விருந்து  கொடுத்தவர்!எங்காத்து தளிகையில்இத்தனைத் திவ்யதேசமா?கண்களில் நீர் பனிக்கவந்தவர்களைவழியனுப்பி வைத்தார்!

அண்ணா!கோபிச்சுக்காதீங்கோ!கவி பாடும் அளவிற்காஅவாத்து தளிகை இருந்தது?நானும்தான் தினமும்எத்தனையோ செய்கிறேன்!ஒரு திவ்யதேசமும் காணோமே?அடியே மண்டு!நமக்கு நாமேபாராட்டிக் கொள்வதற்குபெயரா தாம்பத்யம்?என் சுவை நீயறிவாய்!உன் குறை நானறியேன்!அந்தப் பாட்டுக்கு உனக்குஅர்த்தம் புரியலையா?அந்த அளவுக்குஞானம் இருந்தால்உங்காத்துக்கு நான் ஏன்வாக்கப்பட போகிறேன்?

நான் மண்டுதான்!நீங்களே சொல்லுங்கோ!!கண்ணமுது கோவில்!கண்ணமுது என்றால் பாயசம்!கோவில் என்றால் ஸ்ரீரங்கம்!அரங்கன் கோயிலில் பாயசம்மண் சட்டியில்தான் வைப்பார்கள்!அதனால் பாயசம்சற்று அடிபிடிப்பது என்பது அங்கே தவிர்க்க முடியாத ஒன்று!இங்கேயும் பாயசம்அடிப்பிடித்து இருந்ததால்கண்ணமுது கோவில்!!

அப்படியா அண்ணா!அடுத்தது! அடுத்தது!!!!!கறியமுது விண்ணகர்!கறியமுது என்றால்காய்கறி வகைகள்!விண்ணகர் இருக்கும்ஒப்பில்லாத பெருமானுக்கு நைவேத்தியம் எதுவிலும்உப்பே சேர்க்க மாட்டார்கள்!இவாத்து கறியமுதிலும்இன்று உப்பில்லை!அதனால் கறியமுது விண்ணகர்!!அருமை அண்ணா!அப்புறம்… அப்புறம்…அன்னமது வில்லிபுத்தூர் ஆனதே!ரங்கமன்னாரின் கோயிலிலேஅன்னம் குழைந்தே இருக்குமாம்!இங்கேயும் சாதம்குழைந்தே இருந்ததனால்அன்னமது வில்லிபுத்தூர்!!இப்படியும் உண்டா?அடுத்தது… அடுத்தது…..சாற்றமுது மல்லை!சாற்றமுது என்றால் இரசம்!மல்லை என்றாலோ கடல்!கடல் நீரைப் போலஅவாத்து சாற்றமுதிலும்உப்பே அதிகம்!!

அண்ணா!கொஞ்சம் அதிகமாத்தான் போறீங்க!அடுத்தது என்ன?குழம்பது குருகூர்!குருகூரிலே எது பிரசித்தம்?நம் ஆழ்வான் இருந்தபுளியமரம்தானே!குருகூர் என்றாலே புளிதான்!அவாத்து குழம்பிலும்வெறும் புளிதான்!!கடைசியையும்சொல்லிவிடுங்கள்!!பருப்பதில் திருமலை!திருமலை முழுவதும் கல்தான்!அவாத்து பருப்புமுழுதும் கல்லும் இருந்ததே?அண்ணா!இப்படியா பாடிவிட்டு வருவீர்?

அர்த்தம் புரிந்தால்அவர்கள் தவறாக உம்மைஎண்ண மாட்டாரோ?அடியே!கட்டாயம் எண்ண மாட்டார்!பாகவத சேஷம் என்றுஅந்த உணவினைஅவர்கள் குடும்பம் முழுதும் இந்நேரம் உண்டிருப்பர்!அந்த உணவினில் அவர்கள்சுவைகளைக் கட்டாயம்கண்டிருக்க மாட்டார்கள்!நான் சொல்லி வந்ததிவ்ய தேசங்கள் மட்டுமேஅவர்கள் எண்ணத்தில் இருக்கும்!வெறும் சாதமல்ல அது!இந்நேரம் அதுபிரசாதமாய் மாறியிருக்கும்!!அண்ணா!என்னை மன்னித்து விடுங்கள்!ஒன்று கேட்கிறேன்!கட்டாயம் செய்வீர்களா?

கட்டாயம் செய்கிறேன்!என்ன வேண்டும் உனக்கு?நல்ல தமிழ் சொல்லித் தருகின்றஒரு ஆசான் வேண்டும்!நான் தமிழ் கற்க வேண்டும்!நாளை என் சமையலில்எந்தத் திவ்யதேசம்மறைந்து வருகிறது எனநானும் அறிய வேணடும்!!

#

வாய் விட்டு சிரிங்க நோய் விட்டு போகும்……!

ஒரு கோர்ட்ல கேஸ் நடக்குது . அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க .வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற

அதிர்ந்து போனார் வக்கீல் …மெல்ல சமாளிச்சிகிட்டு…”சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?” ன்னு கேட்டார்.பாட்டி : தெரியுமாவா – . சரியான பொம்பளை பொறுக்கி . பஞ்சாயத்து இவனை ஊற விட்டு ஒதுக்கி வச்சுருச்சு . இப்போ என்னமோ கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் ஜட்ஜ் : மேஜையை தட்டி : ” அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும் ” ன்னு உத்தரவிட்டுட்டு…வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார் .

 ஜட்ஜ் : கோர்ட் மறுபடியும் தொடங்கியதும் நீங்க ரெண்டு பேரும் ” இந்த ஜட்ஜ் அய்யாவை தெரியுமா “ன்னு அந்த கிழவி கிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும் ” ன்னு வார்னிங் குடுத்தார்..!!      வாய் விட்டு சிரிங்க நோய் விட்டு போகும்……!

படித்தேன் சிரித்தேன் பகிர்ந்தேன்

அதிசய ஊர் இது

சொந்த விஷயமாக ஒரு ஊருக்குப் போயிருந்தார் முல்லா. உறைய வைக்கும் கடுங்குளிர் காலம் அது.  வேலையை முடித்துவிட்டு விடுதிக்கு வந்தபோது வெறி நாய் ஒன்று குரைத்தது.   நாயை விரட்டும் நோக்கில் கீழே குனிந்து கல்லை எடுத்தார்  குளிரில் உறைந்த கல்லும் எடுக்க முடியாமல் தரையில் இறுகிக் கிடந்தது.

என்ன அதிசய ஊர் இது?  கல்லைக் கட்டிப் போட்டுவிட்டு வெறி நாயை சுதந்திரமாக அலைய விட்டுள்ளனரே என மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

படித்ததில் சிரித்தது

      தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில் பட்டியில் ஒரு பாட்டி மூட்டையுடன் ஏறினார். கம்பார்ட்மென்டில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் சொன்னாள். “பேராண்டி… நான் நாளை காலை 7 மணிக்கு விழுப்புரத்தில் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். அதிகாலை 2 .00 மணிக்கு இந்த ரயில் விழுப்புரத்தை சென்றடையுமாம்.  நான் தூங்கி விடுவேன் என்னை விழுப்புரத்தில் 2.00 மணிக்கு எழுப்பி இறக்கி விட்டு விடு. நான் எழுந்திருக்கவில்லை என்றாலும் குண்டுக்கட்டாக தூக்கி பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விடு. நான் விடிந்ததும் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபத்திற்கு சென்று விடுவேன். சிரமத்திற்கு மன்னித்துக் கொள். இந்த உதவியை மட்டும் எனக்காக செய்து விடு..” என்றாள்.

அவன் சொன்னான் பாட்டி “இதென்ன உதவி …கண்டிப்பாக நான் உங்களை விழுப்புரத்தில் இறக்கி விட்டு விடுகிறேன் அதற்காக உதவி என்று பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள்..” என்றான். பாட்டியும் அவனை நம்பி நன்றாகத் தூங்கி விட்டாள்.காலை ஏழு மணிக்கு எக்மோர் ஸ்டேசன் வந்ததும் அந்த பாட்டி குய்யோ முறையோ என்று கத்தி அந்த இளைஞனை திட்டுகிறாள். “நீ நல்லா இருப்பியா… நாசமா போயிருவ… உன்னை நம்பி தானடா நான் தூங்கி விட்டேன், முடியாது என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நான் தூங்காமல் இருந்திருப்பேன் அல்லது வேறு யாரிடமாவது சொல்லி இருப்பேனே இப்போதே மணி ஏழாகி விட்டதே.. இனி நான் எப்படி பஸ் பிடித்து எத்தனை மணிக்கு விழுப்புரத்துக்குப் போவேன். முகூர்த்தம் முடிந்து விடுமே…” என்று திட்டிக் கொண்டே இருந்தாள்.

பக்கத்திலிருந்தவர்கள் விசயத்தைக் கேள்விப் பட்டு அவர்களது பங்குக்கு அவர்களும் அவனை திட்டி சாத்து சாத்து என்று சாத்தினார்கள். அவன் இந்த திட்டையும் அடியையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். எல்லோரும் கேட்டார்கள் “ஏண்டா பாட்டியும் நாங்களும் உன்னை இந்த திட்டும் இப்படி அடித்துக் கொண்டிருக்கிறோம்…  நீ எதையும் பொருட்படுத்தாமல் அப்படி என்னத்தையடா யோசித்துக் கொண்டிருக்கிறாய்…” என்று கேட்டார்கள்.அதற்கு அவன் சொன்னான் “இந்தப் பாட்டியே என்னை இப்படித் திட்டுகிறதே.. இந்தப் பாட்டி என்று நினைத்து இன்னொரு பாட்டியை சொல்லச் சொல்ல கேட்காமல் அதிகாலை 2.00 மணிக்கு தர தரவென்று இழுத்து விழுப்புரம் பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விட்டு வந்தேனே… அந்த பாட்டி எப்படி திட்டும்… என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்…