
மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார் முல்லா. அப்போது அடிக்கடி மன்னருடன் அமர்ந்து உணவு சாப்பிடுவார். ஒரு நாள் உணவில் பீன்ஸ் சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிக பசி என்பதால் அதை விரும்பி சாப்பிட்டார். உலகிலேயே சிறந்த காய் பீன்ஸ்தானே……….நீர் என்ன நினைக்கிறீர் எனக் கேட்டார் மன்னர். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு எதுவும் இல்லை என்றார் முல்லா.
உடனே சமையற்காரனை அழைத்து இன்று முதல் பீன்ஸ்க்கு தான் முதலிடம் தாருங்கள் என உத்திரவிட்டார். தொடர்ந்து பீன்ஸ் சாப்பிடவே மன்னருக்கு சலிப்பு ஏற்பட்டது. மீண்டும் ஒரு நாள் மன்னருடன் உணவு சாப்பிட அமர்ந்தார் முல்லா. அப்போது மன்னர் மிக மோசமான காய் பீன்ஸ்தானே நீர் என்ன நினைக்கிறீர் என்றார். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது என்றார்.

பத்து நாட்களுக்கு முன்பு பீன்ஸ் நல்லது என சொன்னீரே………..இப்போது மாற்றுகிறீரே ….என்றார் மன்னர். என்ன செய்யட்டும் மன்னா………….நான் வேலை பார்ப்பது தங்களிடம் தானே பீன்ஸ் காயிடம் இல்லையே என்றார் முல்லா சிரித்தபடியே.